நன்றி
இந்தப்பதிவு புதிய தளத்திற்கு மாறியுள்ளது.
இதுவரை தொழில்நுட்ப உதவிகள் செய்த
ஈஸ்வர பிரசாத்
வொய்ஸ் ஒவ் விங்ஸ்
புதிய தளத்தைப் பெற்றுத் தந்த
மதி கந்தசாமி
எல்லோருக்கும் எனது நன்றிகள்.
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
15 January 2006
எல்லை இல்லாதுபோகும் இசை
வலையில் Kisna என்ற இந்திப்படத்தின் இசை தொகுப்புக் கிடைத்தது (திருட்டுத்தான்!). படம் இதுவரை பார்க்கக் கிடைக்கவில்லை. அதனால் பாடல் காட்சிகளுக்குரிய விளக்கம் எதுவும் தெரியாது. அநேகமான பாடல்களில் ஒருவித இந்து (இந்தி அல்ல!)வாடை வீசுகிறது.
A.R. Rahman, Ismail Darbar என்ற 2 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். மேலைத்தேய-இந்திய இசை இணைந்து கேட்கும்போது புலன்களை தொடுகிறது. குறிப்பாக My Wish Comes True என்ற ஆங்கிலப்பாடல் மேலைத்தேய இசையில் தொடங்கி இந்திய இசையில் முடிகிறது. பாடல்கள் வரிகளைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இதமாக வருடிப் போகும் இசை மொழியின் தேவையைக் கேள்வியாக்குகிறது. Theme என்ற தலைப்பில் பியானோவும், புல்லாங்குழலும் சங்கமிக்கின்றன.
Ismail Darbar என்ற இசையமைப்பாளரைப் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் A.R. Rahman இசையை மேலை நாடுகளும் அறிந்திருக்கின்றன. Bombay Dreams என்ற மியூசிக்கல் இதில் குறிப்பிடக்கூடிய ஒன்று. வந்தே மாதரம் இசைத் தொகுப்புடன் MTVயும் ஒளிபரப்பிவிட்டது.
ஸ்பெயினில் இபிஸா கடற்கரையோரமுள்ள ஒரு Bar இன் பெயர் Café del Mar. இங்கே கடற்கரையில் சூரியன் மறைவை பார்த்து ரசிக்கும் உல்லாசப் பிரயாணிகளுக்கு மேலதிகமாக இசை விருந்தும் கிடைக்கிறது. José Padilla என்ற ஒரு இசை கலைஞரால் உலகின் பல பாகங்களிலுமுள்ள இசை வடிவங்கள் தெரிவு செய்யப்பட்டு இங்கு ஒலிபரப்பாகின்றன. இவை பின்னர் Café del Mar என்ற பெயரில் இதுவரை 12 இசைத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் 5ஆவது தொகுப்பில் A.R. Rahmanஇன் Mumbai themeஐயும் சேர்த்திருக்கிறார்கள்.
இன்னும் Talvin Singh, L.Subramaniam என்று பலரின் இசைத் தொகுப்புகள் மேற்குநாடுகள், ஒஸ்ரேலியாவிலும் விற்பனையாகின்றன.
இந்தியரின், ஆபிரிக்கரின் இசையை/பாடலை மற்றைய நாடுகளிலுள்ளவர்கள் ரசிப்பதும், பாடல் விளங்காமலே இந்திப்பாடலையோ, ஆங்கிலப்பாடலையோ நான் ரசிப்பதற்கும் காரணம் நாடு, மொழி என்ற எல்லைகளைக் கடந்து நிற்கும் இசைதான்.
இப்படி எழுதும்போது இளையராசா, ரஹ்மான் போன்றவர்கள் சினிமாவுக்குள் அடங்கி நிற்பது ஆதங்கமாயிருக்கிறது.
கட்டுகளை உடைத்து இசையைத் திறந்துவிட வேண்டாமா….
மேலதிக தகவல்களிற்கான சுட்டிகள்:
http://www.raaga.com/channels/hindi/movie/H000768.html
http://www.josepadilla.info/
http://www.cafedelmarmusic.com/
http://www.bbc.co.uk/london/entertainment/theatre/bombay_dreams.shtml
http://www.indianviolin.com/lsubindex.htm
http://news.bbc.co.uk/1/hi/entertainment/441762.stm
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
31 December 2005
வாழ்த்துகள்
எல்லோருக்கும் புது வருச வாழ்த்துகள்
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
22 December 2005
சந்தோசமாக வாழும் விருப்பம்
ஒரு கல்லூரியின் கதை என்றொரு படம். நினைவுகள் இழந்து போன ஒரு நண்பனுக்காக, அவனது நண்பர்கள் வைத்தியர் ஆலோசனையின்படி பழைய கல்லூரி வாழ்க்கையை திரும்ப அமைக்கின்றார்கள். அவர்களது முயற்சிக்கு ஆதரவளித்து எல்லாப் பழைய மாணவர்களும், ஆசிரியர்களும் திரும்ப கல்லூரிக்கு வருகிறார்கள். இவர்களில் திருமணம் செய்து குழந்தைகளுடன் இருப்பவர்களும் அடங்கும். தொழிலதிபர்களும் அடங்கும். இவர்கள் எல்லோரினதும் அரும்பெரும் முயற்சியினால் அந்த மாணவனும் நிகழ்காலத்திற்கு வந்து, காதலியையும் கைப்பிடித்து, எல்லாம் சுபமாக முடிகிறது.
வீர்-ஸாறா என்றொரு ஹிந்திப் படம். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கும் பக்கத்து வீட்டுக்குப் போய் வருவதுபோல் போய் வருகிறார்கள். பாகிஸ்தான் பெண்ணைக் கண்ட உடனேயே அவள்தான் மருமகள் என்று இந்தியப் பெற்றோர் முடிவெடுத்து விடுகிறார்கள். பாகிஸ்தான் அம்மாவோ தனது மகளை மறந்துவிடும்படி இந்திய இளைஞனிடம் கெஞ்சுகிறாள். பாகிஸ்தான் பெண் வழக்குரைஞர் இந்திய கைதிக்காக வழக்காடுகிறார். சிறைச்சாலை அதிகாரியும் இந்திய கைதிக்காகப் பரிந்து பேசுகிறார். முடிவில் நீதி வென்று, இந்தியக் கைதி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தேசம் பற்றிக் கவிதை வாசித்துவிட்டு பாகிஸ்தான் காதலியுடன் இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்.
பண்டிகைக்காலம் வந்துவிட்டது. தமக்குத் தமக்குப் பிடித்தவர்களுக்காக அன்பளிப்புகள் வாங்க கடை கடையாய் ஏறி இறங்குகிறார்கள். குழந்தைகள் சந்தோசமாயிருக்கின்றன. அவர்களுடன் சேர்ந்து பெரியவர்களும் வெடிகளுடன் புது வருடத்தை வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது மனசு சந்தோசப்படுகிறது. உலகம் எவ்வளவு அழகானது. அரசு, பொலிஸ், நீதிமன்றம் என்று எல்லாம் எவ்வளவு நேர்மையாக இருக்கின்றன. உலகத்தில் மக்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் நல்லவர்களாகவும், நடப்பவையெல்லாம் நல்லதாகவுமே இருக்கின்றன.
———————————————————-
“நீ எல்லாவற்றையுமே பிழையாகத்தான் பார்க்கிறாய்”
“உனக்கு நல்லவைகள் கண்ணுக்குத் தெரியவில்லையா?”
“எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பதையும், நொட்டை சொல்வதையும் தவிர வேறென்ன உனக்குத் தெரியும்?”
“எல்லாமே பாதகமானது என்றால் நீ என்ன வாழாமலா இருக்கிறாய்?”
இப்படியாகவும், இதைப் போலவும், இதைவிடக் கூடுதலாகவும் என் நண்பன் என்மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான்.
———————————————————–
பத்திரிகை வாசிக்கிறேன். தொலைக்காட்சி பார்க்கிறேன். வானொலி கேட்கிறேன். இணையம் பார்க்கிறேன். இவற்றிலிருந்து கடந்த சில நாட்களில் மட்டும் எனக்கு கிடைத்த செய்திகள்:
- தனது தவறுகளை உணர்ந்து, வன்முறையின் கொடுமைகளை பிள்ளைகளுக்கும், வளர்ந்தோருக்கும் புத்தகங்களாக எழுதிய ஒரு மரண தண்டனைக் கைதி பலரதும் எதிர்ப்பையும் மீறி விச ஊசி மூலம் கொல்லப்பட்டான். 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தாலும், அதில் திருப்தி அடையாமல் கைதியைக் கொன்று அமெரிக்க நீதி மீண்டும் நிலைநாட்டப்பட்டது.
- 17 மில்லியன் ஆபிரிக்கர்கள் எய்ட்ஸினால் இறந்துள்ளார்கள். எய்ட்ஸுக்கான மருந்தின் விலை மருந்து தயாரிக்கும் நிறுவனங்களால் இன்னமும் குறைக்கப்படவில்லை.
- இலங்கையில் கிழக்கில் முஸ்லீம்/தமிழ் மக்கள் வெட்டியும், சுட்டும் கொல்லப்படுகிறார்கள். வடக்கில் இராணுவ வெறிக்கு மீண்டும் ஒரு பெண் பலி. அரசியல் தீர்வு மட்டும் வேண்டப்படாத ஒன்றாக இருக்கிறது.
- பாகிஸ்தானில் 40,000 இற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் ஒரு கூடாரம் கூட இன்றி வெறும் தரையில் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
- ஈராக்கில் குண்டு வெடித்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
- சீனாவில் 74 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு இறந்தனர். மிக மோசமான வேலைத்தள நிலமைகளில் வேலை செய்யும் சீன நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் வேலைத் தளங்களில் நூற்றுக்கணக்கில் அகால மரணமடைகின்றனர்.
- ஒஸ்ரேலியாவில் வெள்ளையர்கள் வெள்ளையரல்லாதோரைத் தாக்கினார்கள். பின் தாக்கப்பட்டவர்கள் வெள்ளை ஒஸ்ரேலியரைத் தாக்கினர். மறுபடியும் வெள்ளை….
—————————————————————
பிழையைப் பார்ப்பது, குறை சொல்வது, சரியில்லை என்பது…
கவலைப்படுவது, ஆத்திரப்படுவது, பயப்படுவது….
இவை யாவும் எனது குற்றங்களா?
எனக்கு மட்டும் சந்தோசமாக இருக்க விருப்பமில்லையா என்ன!
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
25 November 2005
மழை, ஏழை, புயல், வறுமை
அண்மைய காலங்களில் இயற்கை அழிவுகள் பெருமளவில் நிகழ்ந்துள்ளன. இனிவரும் காலங்களில் இவை இன்னமும் அதிகரிக்கலாம் என மாறி வரும் வெப்பநிலையைக் காரணம் காட்டி ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இயற்கை அழிவுகள் தனியே இயற்கை சார்ந்தது மட்டுமல்ல, இயற்கையின் வழமையைச் சீர்குலைக்கும் மனிதரின் அசுர பொருளாதார வேகமும் இந்த அழிவில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது விரிவாகப் பேசப்பட வேண்டிய இன்னொரு விடயம்.
மழை, புயல், நிலநடுக்கம், மண்சரிவு… என்ற இயற்கை அழிவுகளுக்கும் ஏழை/பணக்காரருக்கும் சம்பந்தமிருக்கின்றதா என்று கேட்டால் இருக்கென்றே சொல்வேன். இயற்கை அழிவுகளின் பாதிப்புகள் பொருளாதார வேறுபாடுகளுக்கமையவே இருக்கின்றன.
இயற்கை தனது இலக்கை வறுமை/செல்வம் பார்த்து தெரிவு செய்யவில்லை. ஆனால் இயற்கை அழிவுகள் அடிக்கடி ஏற்படும் என்று அறியப்பட்ட இடங்களில் யார் வாழ்கிறார்கள் என்பது தெரிவு செய்யப்படுகிறது. இயற்கை அழிவுகளில் யாருக்கு பாதிப்பு, யாருக்கு உதவிகள் என்பதில் தேர்வு இருக்கிறது.
இந்த வருடம் அமெரிக்காவில் நியூ ஓர்லன் பகுதியில் புயல் பற்றிய எச்சரிக்கையின் பின் வாகன வசதியுள்ளவர்கள்/தூர இடங்களிலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கக் கூடியவர்கள் கூடிய சீக்கிரமே வெளியேறி தப்பிக் கொண்டார்கள். வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்கள் - பெரும்பான்மையான அவ்ரோஅமெரிக்கர்கள் - தப்பியோட வழியின்றி புயலில் சிக்கிக் கொண்டார்கள். இதேநேரம் பஸ் வண்டிகள் போன்ற அரச வாகனங்கள் டிப்போக்களில் முடங்கிக் கிடந்தன. வைத்தியசாலைகள், முதியோர் விடுதிகளில் இருந்தோரும் ஏழ்மையான பிரதேசம் என்றபடியால் கவனிக்கப்படாது உயிரிழந்தார்கள். இங்கே புயலில் யாரின் உயிர் முக்கியம் என்பதை அவர்களின் பொருளாதாரமே தீர்மானித்தது.
உலகின் சனாயக காவல்காரனாகத் தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட அமெரிக்காவில் கறுப்பின மக்கள்/ஏழைகள் எந்த உதவியும் இல்லாமல் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தெருக்களில் பிணங்களோடு செய்வதறியாது தத்தளித்துக் கொண்டிருந்ததை வெளிநாட்டு தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்தன.
அரச உதவிகள் எதுவுமே கிடைக்கப் பெறாமல், குடிக்க குடிநீருக்காக கடையை உடைத்த அவ்ரோஅமெரிக்கர்கள் கொள்ளையர்கள்/கிறிமினல்களாகவும் வெள்ளை அமெரிக்கர்கள் தமது தாகத்தைத் தீர்க்க எடுப்பதாகவும் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார்கள். உணவுப் பொருட்களை வெள்ளையல்லாத அமெரிக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இராணுவமும் அனுப்பி வைக்கப்பட்டது. கதரினாவுடன் அமெரிக்காவின் முகமூடி மீண்டும் கிழிந்தது.
அமெரிக்காவை புயல்/சூறாவளி தாக்க முன்பும், பின்பும் கியூபாவையும், மெக்ஸிக்கோ, எல்சல்வடோர் மற்றும் தென்னமெரிக்கா நாடுகளையும் மோசமாகத் தாக்குகிறது. எண்ணிக்கையிலும் பெருமளவு மனித இழப்புகளுடன் பாதிக்கப்படும் இந்நாடுகள் தொலைக்காட்சிகளில் மின்னி மறைந்து அமெரிக்காவின் நேரடி ஒளிபரப்பே முழுவதுமாக இடம் பிடித்துக் கொள்ளும். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருப்பவர்களைப் போல இந்த நாட்டு மக்களுக்கு ஒன்று போனால் மற்றது என்று பல வீடுகள் இல்லை. சேதமடைந்தவையைத் திருத்த/புதிதாகப் பெற்றுக்கொள்ள காப்புறுதி இல்லை. குறிப்பாக அமெரிக்காவைப் போலவே இயற்கை அழிவைத் தொடர்ந்து முகம் கொடுத்துவரும் கியூபா மீது அமெரிக்காவினதும், ஐ.நா.வினதும் பொருளாதார, மருந்துத்தடைகள் நீக்கப்படாமலேயுள்ளன.
கடந்த வருடம் சுனாமி அழிவு பலரது கவனத்தையும் ஈர்த்ததில் அழிவு நடந்த பிரதேசங்கள் உல்லாசப் பிரயாணங்களுக்குரிய இடங்கள் என்பதும் முக்கியமானது. இதனால் உலக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தில் அரச உதவிகளுக்கு இணையாக பொதுமக்களின் உதவியும் குவிந்தது. ஆனால் மிக விரைவில் புனர்நிர்மாணம் அடைந்தவை உல்லாசப் பிரயாணிகளுக்கான நட்சத்திர விடுதிகளும் மேற்படி நாடுகளின் அரசுகளும்தான். அழிவில் பாதிக்கப்பட்ட உள்நாட்டுமக்கள் வைத்தியசாலைகளில் இடமின்றி தெருக்களில் வைத்திய உதவியை எதிர்பார்த்து காத்திருந்தபோது உல்லாசப்பிரயாணிகளை மட்டும் அந்தந்த நாட்டு விமானங்கள் வைத்தியருடன் வந்து ஏற்றிச்சென்றன. இந்தியாவில் உயிரிழந்தவர்களில் தலித்துகளைத் தொட்டுத் தூக்கி ஒன்றாகப் போட்டுக் கொளுத்த வேறு பிரதேசங்களிலிருந்து தலித்துகள் கொண்டுவரப்பட்டார்கள். இதேநேரம் வெளிநாட்டவரின் உடல்கள் சிறப்பு வைத்தியநிபுணர்கள் தருவிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு மரியாதையுடன் புதைக்கப்பட்டன. இயற்கை அழிவினால் உயிரிழந்தவர்களின் பிணங்கள் கூட சாதி/இன/தேசிய அடையாளங்களை வைத்தும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவுமே அடக்கம் செய்யப்பட்டன.
இப்போது காஷ்மீரில் நிலநடுக்கத்தில் 80,000 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். எதிர்பார்க்கும் உதவி கிடைக்காவிட்டால் வர இருக்கும் குளிர் இன்னும் பல உயிர்களைப் பலிகொள்ளப் போகிறது என்று ஐ.நா. தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருக்கிறது. எரிபொருளுக்குரிய பணம் கிடைக்காததால் ஹெலிக்கொப்ரர்கள் பறப்பதை நிறுத்திவிட்டன என்று ஐ.நா தெரிவிக்கிறது. இதேநேரம் பாகிஸ்தானின் அடுத்த எல்லை நாடான அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஹெலிக்கொப்ரர்களும், விமானங்களும் எந்த எரிபொருள் பிரச்ச்சினையுமின்றி குண்டு போட்டுக்கொண்டிருக்கின்றன. ஈராக்கிலும், அப்கானிஸ்தானிலும் யுத்தத்திற்கு நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரிலோ குளிரில் அடுத்த நேர உணவுக்கு ரொட்டித் துண்டை எதிர்பார்த்து தெருவில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளின் பிரபலமான இடமல்ல. உயிரிழந்தவர்களும், பாதிக்கப்பட்டிருப்பவர்களும் வறிய மக்கள். உதவி என்ற பெயரில் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ பாகிஸ்தானுக்குள் நுழைய வேண்டியதில்லை. ஏற்கெனவே அவர்கள் புகுந்து விட்டார்கள். ஆக மொத்தத்தில் இந்த மக்களை யாருக்கும் தேவைப்படவில்லை. விளைவு, ஊடகங்களில் செய்தி மறைந்துவிட்டது. ஐ.நா.கேட்கும் நிதியை கொடுப்பார் யாருமில்லை. ஐ.நா.வும் தனது நிதியை முதலிடத் தயாராயில்லை. நிலநடுக்கத்தில் கொல்லப்பட்ட மக்கள் போக, இனி வர இருக்கும் குளிரில் இறந்தவர்களின் தொகை என்று ஒரு கணக்கீடு மட்டும் காட்டுவார்கள்.
இலங்கையில் சுனாமியால் உயிரிழந்த/தொழிலைப் பறிகொடுத்து நிர்க்கதியாகியுள்ள சிங்கள/தமிழ்/முஸ்லீம் மீனவக் குடும்பமோ அல்லது மொன்சூன் மழை-வெள்ளத்தில் தங்கியிருந்த இடத்தையும் இழந்துபோன தாய்வானின் சேரி வாழ் மக்களோ, இயற்கை அழிவைப் பொறுத்தவரையில் கூலிகள், ஏழைகள், தலித்துகள் என்போர் …….. வெறும் எண்ணிக்கை மட்டும்தான்.
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
29 October 2005
தமிழ்மணம் ஏன், இப்படி?
தமிழ்மணத்தின் பின்னாலிருப்பவர்களின் உழைப்பு மதிப்பிற்குரியது. தமிழ்மணத்தின் தொழில்நுட்ப சிரமங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இத் திரட்டியை உருவாக்கி, இதன் சேவையை இலவசமாகத் தருவதற்கு நண்றிகள். தமிழ்மண நிர்வாகிகளையோ, எந்த ஒரு வலைப்பதிவாளர்களையுமோ எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. இந்த முற்குறிப்புகளுடன் எனது கருத்தை எழுதுகிறேன்.
தொடர்ச்சி…
25 September 2005
அவர்களைப் பற்றி…
“அடிப்படையில் எல்லா மனிதர்களும் மனநோயாளர்கள்தான். அப்படியில்லாதது இன்னொருவிதமான மனநோய்” - பாஸ்கல்
ஊரிலே, மனநோயாளி ஒருவர் இருப்பாரானால் அந்த ஊர் சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான். கல்லெடுத்து எறிவதும், பரிகசிப்பதும், அவர்களைத் துன்புறுத்தி அதில் வேடிக்கை காண்பதும் அவர்களது பொழுதுபோக்காகிவிடும். இது பற்றி அவர்களது பெற்றோர்/ஊர்பெரியோர் என்று யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது சிறுவர்களுக்கு Open license ஆகிவிடும். இது தவிர தம்மை விட வயசு மூத்தவர்கள் இந்த மனநோயாளிகளை நடத்தும் முறையைப் பார்க்கும் சிறுவர்களுக்கு அதுவே ஊக்கமாகிவிடுகிறது.
…………………………….
83இன் பின் ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த (30இற்கும் மேற்பட்டவை) பெரும்பாலானா இயக்கங்கள் மனநோயாளிகளையும் தமது இலக்காகக் கொண்டிருந்தனர். மனநோயாளிகளில் சுட்டுப் பழகினர். அவர்களைக் கொன்று, விளக்குக் கம்பத்தில் கட்டித் தூக்கிவிட்டு, சிங்கள அரசின் உளவாளிகள் என்று எழுதி வைத்தார்கள். கொல்லப்பட்டவர்கள் மனநோயாளிகள் என்பதாலோ என்னவோ இவற்றிற்கெதிராக மனிதாபிமானக்குரல்கள் எதுவும் தமிழ்பிரதேசங்களில் வீறுகொண்டு எழவில்லை. கிழக்கு மாகானத்தில் இப்படியாக புளொட்டினரால் கொல்லப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய சிறுகதையொன்று 90களில் ஐரோப்பிய சிறுசஞ்சிகையொன்றில் வந்திருந்தது.
…………………………….
மனநோயாளர்களுக்கான சிகிச்சை முறைகளும் நகைச்சுவையாக்கப்பட்டிருந்தன. விலங்குகளைப் போல சங்கிலியால் கட்டி வைப்பதே பொதுவான சிகிச்சையாக இருந்தது. அங்கொட என்ற இலங்கையின் மேற்குப்பகுதியிலிருந்த பிரபலமான மனநோய் மருத்துவமனை தமிழர்களால் மனநோயாளர்களைக் கேலி செய்வதற்கு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது. யாழ்.பெரியாஸ்பதிரியில் 4வது இலக்க சிகிச்சைப் பிரிவில் மனநோயாளர்கள் தங்க வைக்கப்பட்டனர். இதனால் 4ஆம் வாட் என்பதும் மனநோயாளர்களைக் குறித்துக் கேலிசெய்யும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. தமிழத்தில் இது கீழ்ப்பாக்கம் என்றிருந்தது.
ஒரு பக்கத்தில் மனநோய் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மனநோயாளிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர். மற்றப் பக்கத்தில் இவர்களுக்கான பொறுப்பை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில் தெருவில் அலையவிடப்பட்டார்கள். இவர்கள் சாப்பிட உணவின்றி பட்டினியாலோ, தெருவில் வாகனங்களால் மோதப்பட்டோ செத்துப்போனார்கள்/கொல்லப்பட்டார்கள்.
………………………………
ஊடகங்களில் மனநோயாளிகள் கேலி செய்யப்பட்டனர். யாழிலிருந்து வெளியான சிரித்திரனிலிருந்து, தமிழக விகடன்/குமுதம் வரை இதில் விதிவிலக்கில்லை. நாடகங்களிலும் நகைச்சுவை என்ற பெயரில் மனநோயாளர் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பாத்திரங்களைக் கண்டவுடனேயே பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய விதத்தில் இந்த மனநோயாளிகள் பாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கோடம்பாக்கத்து சினிமாக்களும் நாடகங்களின் அடிப்படையில் மனநோயாளிகளை நகைச்சுவைப் பாத்திரங்களாக அமைத்துக் கொண்டன. யதார்த்த வாழ்வில் கண்ணில் அகப்படும் மனநோயாளிகளை சினிமா காட்டிய மனநோயாளிகளாகப் பார்ப்பதும், படங்களில்/நாடகங்களில் வந்ததுபோலவே அவர்களை கேலி/துன்புறுத்தல் செய்து அதில் இன்பம் காண்பதும் தொடர்கிறது.
………………………………
நகைச்சுவைக்காக கோடம்பாக்கத்து சினிமாவில் கையாளப்பட்ட மனநோயாளிகள் திடீரென வேறு ஒரு பரிமாணத்திற்கு மாற்றப்பட்டார்கள். குழந்தையாக/சிறுபிள்ளையாக இருக்கும்போது உரிய அன்பு/பாசம்/கவனிப்பு கிடைக்காமல் போபவர்கள் வளர்ந்ததும் ஈவிரக்கமற்ற கொலையாளிகளாக/கொடுமயானவர்களாக மனயோயாளிகளாகி விடுகின்றனர் என்பதே கோடம்பாக்கத்தின் கண்டுபிடிப்பு. பாலுமகேந்திராவின் மூடுபனி, பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் ஒரு வகை. செல்வராகவனின் காதல்கொண்டேன், சுந்தரின் சின்னா, பாரதிராஜாவின் கண்களால் கைது செய் இன்னொருவகை என்று பட்டியல் போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே மனநோயாளிகளைப் பற்றி பொதுப் புத்தி மட்டத்தில் ஒரு பார்வை இருக்கிறது. இது ஆரோக்கியமற்ற, மனிதாபிமானமற்ற பார்வை. நோயாளிகளை நகைச்சுவையாக்கும்/கேவலப்படுத்தும் பார்வை. அவர்களைத் துன்புறுத்தி, அதில் சிரித்துக் கொள்ளும் வக்கிரமான பார்வை.
தற்போது அடுத்தடுத்து வரும் கோடம்பாக்கத்து சினிமாக்களோ மனநோயாளிகளைப் பார்த்து கொலைப் பயத்தில் மிரள வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.
……………………………………
மனநோய் என்பது ஒரு நோயாக எமது சமூகத்தால் பார்க்கப்படாததால், மனநோயாளிகளும் நோயாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. இதனால் இவர்களுக்கான சிகிச்சைகளும் கவனிக்கப்படுவதில்லை. குறிப்பாக மனநோயாளிகளுக்கு கிடைக்க வேண்டிய அன்பு/அருகாமை/கவனிப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு நேரெதிரான விதத்திலேயே எமக்கும் அவர்களுக்குமான உறவு இருக்கின்றது.
……………………………………………………………………….
மனநோயாளிகள் குறித்து சில விடயங்களை நான் புரிந்து கொள்ள உதவியவை:
1. “மனநோயாளிகள்,சிகிச்சை முறைகள்: சில குறிப்புகள்” - கோபி கிருஷ்ணன் (126ஆம் பக்கம், “மழை” காலாண்டிதழ், ஆசிரியர் யூமா.வாசுகி)
2. “கொஞ்சம் அவர்களைப் பற்றி….” - சபி, லதா ராமகிருஷ்ணன், கோபிகிருஷ்ணன் (சவுத் ஏசியன் புக்ஸ்)
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
07 September 2005
ஆண்களாகவே இருத்தல்
நடிகைகள் விபச்சாரிகள் என்று தங்கர்பச்சான் சொல்லி, பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டும் முடிந்து விட்டது. ஆனால் வலைப் பதிவுகளில் இது குறித்தான கருத்தாடல் இன்னும் தொடர்கிறது. எழுதுபவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஆண்கள் என்று அடையாளப்படுத்துவதில் ஆவேசமாகவே இருக்கிறார்கள்.
முதலில் தங்கர்பச்சானின் அப்பட்டமான ஆணியக் கருத்து கண்டிப்பிற்குரியது. இதற்கு அவர் முற்போக்கு இயக்குநர்/வித்தியாசமானவர்/சிந்திக்கக் கூடியவர் என்ற அடைமொழிகள் தேவையில்லை. இந்த அடைமொழிகளால் ஆணியக் கருத்துகள் சிறப்புத் தகுதியைப் பெற்றுவிடுவதில்லை.
தங்கர்பச்சானை நியாயப்படுத்தப் புறப்பட்ட ஆண்வலைப்பதிவாளர்கள் ஒரு படி மேலே போய் பெண்களை குறிப்பாக நடிகைகளை குரூரமாக உரிந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கர்பச்சானுக்கு ஆதரவு தருவதாக நினத்து இவர்களின் பெண்கள் பற்றிய வக்கிரங்கள் இங்கே குப்பையாகக் கொட்டப்படுகின்றன. அம்மா, மனைவி, சகோதரிகள் என்று எல்லோரையும் இழுத்து அம்மணமாக்கிப் பார்க்கிறார்கள். இதிலுள்ள முரண்நகை என்னவென்றால் எந்த ஒரு தயவு தாட்சணியமுமின்றி நடிகைகளைத் தரக்குறைவாக எழுதியவர்களை ரோசாவசந்த் நாய் என்று குறிப்பிட்டது மட்டும் அவர்களுக்கு நாகரிகமில்லாமல் தெரிகிறது.
நடிகைகளை இழிவாகப் பேசுவதைக் கண்டிப்பவர்களில் சிலர் கூட “எங்கள் பெண்களை”இப்படிக் கேவலமாகப் பேசினால் விடுவோமா என்றே பார்க்கிறார்கள்.
தங்கர்பச்சான் விடயத்தைத் தாண்டிப் பார்த்தோமென்றால் இந்த ஆணியம் பல்வேறு வழிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வலைப்பதிவுகளில் தொடர்வதைக் காணலாம்.
யாழ் கோபிக்கு அம்மன் வேடத்தில் “ஒழுக்கமற்ற” நடிகைகள் நடிப்பது தலையாய பிரச்சினையாக இருக்கிறது. சிவபெருமான், முருகனாகத் தோன்றும் நடிகர்களின் ஒழுக்கம் குறித்து எந்தக் குழப்பமும் அவருக்கு இல்லை. அவருக்குள்ளிருக்கும் ஆணை அவருக்கு தெளிவுபடுத்திக் காட்டுவதற்கு அப்பால் போய் யாழிலிருந்து இப்படி எழுதலாமா என்று கேட்டால் யாழ் மண் என்ன Automatic ஆக எல்லா ஆண்களுக்கும் பெண்கள் பற்றிய புரிதலைக் கொடுத்து விடுகிறதா?
புலிகள் மீது கேள்விகள் எழுப்பினால், புலிகளை விமர்சித்தால் இதற்கென்றே காத்திருந்தது போல தூசணப் பின்னூட்டங்கள் வந்து குவிகின்றன. தமது கோபத்தைக் காட்டுவதாக நினைத்து இந்த விசிறிகள்/பக்தர்கள் பெண்களையே இழிவுபடுத்திக் கொண்டிருகின்றனர். தமிழில் தூசணம் எழுதினால் தமிழைக் கேவலப்படுத்தும் (!) என்று ஆங்கிலத்தில் வாந்தியெடுக்கும் இந்த வகையறாக்கள் மொழிக்கு கொடுக்கும் மரியாதையில் ஒரு இம்மியளவும் பெண்களுக்கு கொடுக்கக் கூடாதென்பதில் தெளிவாக இருக்கின்றன.
மறு பக்கத்தில் இந்தப் பின்னூட்டங்களைப் பெற்றுக் கொண்ட பதிவாளர்களோ இவற்றை அழித்துவிடாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இந்தத் தூசணப் பின்னூட்டங்களை எழுதியவர்கள் புலிகள்/புலி ஆதரவாளர்கள். இவற்றை அழிக்காமல் பார்வைக்கு வைத்திருப்பதன் மூலம் புலிகளை அம்பலப்படுத்துவதாக அவர்கள் நினைப்பு. இதற்காக பெண்கள் இழுவுபடுத்தப்படுவது இவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஆக தத்தம் அரசியலுக்காகப் பெண்களைக் காலில் போட்டு மிதித்துகொண்டுதான் மனித உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள்.
மாயகோவ்ஸ்கி, ஜேஆன்-பவுல் சாற்ரார்… என்று மாய்ந்து மாய்ந்து எழுதும் ப.வி.சிறீரங்கனிடம் இதற்கும் நம்மூர் ஆறுமுகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் பெண்கள் எதிர்க்குரல் கொடுக்கும்போது அவருக்குள்ளிருக்கும் ஆண் எரிச்சலடைந்து “நாம் சிமோன் டி பூவாவையும் நமது நாட்டு வசந்தியையும் ஒரே கருத்து நிலையிலுள்ளவராகவும்-சமூகப்புரிதலோடுமிருப்பவராகக் கற்பனையில் உலாவரலாம் .நிசம் வேறுமாதிரியானது” என்று எழுத வைக்கிறது.
எல்லா விடயங்களையும் தத்துவ ரீதியாகப் பார்க்கும் ரயாகரனுக்கு கற்பு/கற்பழிப்பு என்று எழுதுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. காலம் காலமாக வழக்கிலிருக்கும் ஆண்மொழியை எதிர்ப்பது ரயாகரனுக்கு ஒரு போராட்டமாகத் தெரியவில்லை. “என்னதான் சொல்லை மாற்றினாலும் ஆணாதிக்க சமூக அமைப்பில் அச் சொல்லுக்குரிய அர்த்தங்கள் மாறிவிடுவதில்லை. மாறுவதாயின் சமூக அமைப்பு மாறவேண்டும்” என்கிறார். இவர் கருத்துப்படி சமூக அமைப்பு மாறுவதற்கு ஒரு Deadline வைத்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். சமச்சீரற்ற சமூக அமைப்பில் ஒவ்வொருநாளுமே போராட்டம்தான். ஒடுக்குமுறை பல வடிவங்களில் ஒடுக்குகிறது. அதில் மொழிரீதியான ஒடுக்குமுறை/பாகுபாடு அடங்கும். உலகத்தின் அனைத்து மொழிகளும் ஆண்மொழிகள்தான். ஆணாதிக்க மொழிதான். இதை எதிர்த்துப் போராடுவதற்கு சமூக அமைப்பு மாறும்வரை பெண்களைக் காத்திருக்கச் சொல்வதுகூட ஆணாதிக்கமே. ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் ஒடுக்கப்படுவோர் அதனை எதிர்த்துப் போராடுவதுதான் இயங்கியல்.
முடிவாக,
வலது/இடது, பிற்போக்கு/முற்போக்கு, தேசியம்/சர்வதேசியம் என்று எந்த அரசியலைப் பிரதிநித்துவப்படுத்தினாலும் ஆண்கள் “ஆண்களாகவே” இருக்கின்றனர்.
(எனக்குள்ளிருக்கும் ஆணியத்தையும் பெண் நண்பர்கள் சுட்டிக்காட்டும்போது தலை குனிகிறது)
இந்தப் பதிவை எழுதத் தூண்டிய பதிவுகள்:
1. http://tamilarangam.blogspot.com/2005/09/blog-post_07.html
2. http://tamilarangam.blogspot.com/2005/09/blog-post_03.html
3. http://mauran.blogspot.com/2005/08/blog-post_24.html
4. http://rozavasanth.blogspot.com/2005/09/blog-post_03.html
5. http://biththan.blogspot.com/2005/08/blog-post_112549051196095660.html
6. http://yemkaykumar.blogspot.com/2005/08/blog-post_30.html
7. http://ramsanjay.blogspot.com/2005/08/blog-post_112542507123028877.html
8. http://mugamoodi.blogspot.com/2005/08/blog-post_112541792303756908.html
9. http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_30.html
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
03 September 2005
பாலியல்வதை, புலி எதிர்ப்பு/ஆதரவு
யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தனது வீட்டில் வேலைக்கு வைத்திருந்த 13 வயதுச் சிறுமியை பாலியல்வதை செய்துள்ளார். இப் பேராசிரியர் புலிகளின் மாணவர் பேரவை பேச்சாளருமாவார்.
- செய்தி
மேற்படி செய்தியின் உள்ளடக்கத்தை “40 தடைவைகள் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகம் யாழ்ப்பாணப் புலி ஆதரவுப் பல்கலை விரிவுரையாளர்” என்று புலி எதிர்ப்பாளர்கள் காட்டும் புலி எதிர்ப்பு வெறியிலும், “புலிகளுக்கும் இதற்கும் சம்பந்தமுமில்லை” என்று மட்டும் திருப்பித் திருப்பி புலி ஆதரவாளர்கள் ஒப்புவித்துக் கொண்டிருப்பதிலும் செய்தியில் இருக்கும் அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.
ஏழைக் குடும்பங்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் பிள்ளைகளை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது யாழ் சமூகத்தில் புலிகளின் உருவாக்கத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஆரம்ப காலங்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் யாழுக்குக் கொண்டுவரப்பட்டு கசக்கிப் பிழியப்பட்டார்கள். வீடுகளின் பின்புறங்களிலும், நாய் படுக்கும் தரையிலும் இந்தக் குழந்தைகள் தூங்கின. வீட்டுக்காரரின் பிள்ளைகளுக்கு அளவில்லாது போன, கிழிந்துபோன உடைகளே இந்தக் குழந்தைகளுக்கு கிடைத்தன. மிஞ்சிப்போன/ஊசிப்போன உணவே சாப்பிடக் கிடைத்தது. தம் குழந்தைகளை பார்க்க மலையகத்திலிருந்து காசு செலவழித்து, நீண்ட தூரப் பிரயாணம் செய்து பெற்றோர் வந்து தன் பிள்ளை வேலை செய்யும் வீட்டு வாசலின் முன் தவம் கிடப்பர். வீட்டுக்காரர் பிள்ளையைக் காட்டார். குழந்தை பெற்றோருடன் போய்விடும் என்ற பயம். வீட்டுக்காரரின் பாலியல் வதைகளினாலோ/உடல் ரீதியிலான சித்திரவதையினாலோ இந்தக் குழந்தைகள் இறந்துபோனால்/கொல்லப்பட்டால் ஊரவரின் மௌன அங்கீகரிப்புடனும் சிறீலங்கா அரசின் பொலிஸ் ஆதரவுடனும் இந்தக் குழந்தைகள் அநாமதேயமாக யாழ் மண்ணில் புதைக்கப்பட்டார்கள்.
நீண்ட கால இடைவெளியின் பின் இப்போது மீண்டும் ஒரு கொடுமை வெளியில் வந்துள்ளது. வறுமையைப் பயன்படுத்திக் கொத்தடிமையாக்கப்பட்ட குழந்தை இம் முறை மலையகத்திலிருந்து வரவில்லை. பக்கத்திலுள்ள புதுக்குடியிருப்பிலிருந்து வந்துள்ளது. யாழ் சமூகம் நீண்டகால ஈழப்போராட்டத்தின் பின்னும் தனது வக்கிர/ஆதிக்க நடைமுறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை. இது ஒரு சமூகத்தின் கொடூரம்.
சரி, இதில் புலிகள் எங்கே சம்பந்தப்படுகிறார்கள்?!
90%இற்கும் அதிகமான தமிழ் ஊடகங்கள் புலிகளிடம்/புலிகளிற்காய் உள்ளன. அவைகளின் திறமையான தொழில்நுட்பங்கள்/வசதிகளால் ஈழத்துச் செய்திகள் நிமிட இடைவெளியில் வெளியிடப்படுகின்றன/புதுப்பிக்கப்படுகின்றன. மேற்படி செய்தி மட்டும் அவர்களின் ஊடகங்களிற்கு முக்கியமற்றுப் போனது ஏன்?
இச் செய்தி கிடைத்த மறு நிமிடமே அந்தப் பேராசிரியர் மாணவர் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக புலிகள் ஏன் அறிவிக்கவில்லை? சிறீலங்கா நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு காத்திருத்தல் என்று சொல்ல முடியாது. குற்றம் உறுதிப்படுத்தப்படும்வரை சம்பந்தப்பட்டவர் சந்தேகத்திற்குரியவரே!
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு அப்பால் நடந்ததால் செய்வதற்கொன்றுமில்லை என்று சொல்லிவிட முடியாது. இராணுவத்திற்கும், அரசிற்கும் எதிரான தூண்டுதல் நடவடிக்கைகள் புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இடம்பெறவில்லையா?
புலிகள் பல விடயங்களில் ஒரு நிழல் அரசாங்கமாகவே தமது செயற்பாடுகளை அமைக்கின்றனர். புலிகளால் பல விடயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருந்து வேலை வாங்குவது மட்டும் ஏன் தடை செய்யப்படவில்லை?
புலிகளால் வரி அறவிடப்படுகிறது. வெளிநாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர்களிடம் பல்வேறு பெயர்களில் நிதி சேகரிக்கப்படுகிறது. வன்னிக்கு அருகிலுள்ள புதுக்குடியிருப்பில் வறுமை காரணமாக பெற்றோர் பாடசாலைக்குப் போக வேண்டிய தமது 13 வயதுப் பிள்ளையை கொத்தடிமையாக வேலைக்கு அனுப்புகிறார்களென்றால், சேகரிக்கும் நிதியில் இதனைத் தடுப்பதற்கான திட்டங்கள் போடப்படவில்லையா?
ஏன் புலிகளை இப்படியெல்லாம் கேட்கவேண்டும்?
புலிகள் ஈழத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகள்!
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
24 August 2005
கறுப்பு என்பது கறுப்புத்தானா?
மொழி என்பது பொதுவானதல்ல, அது ஆண் மொழியே என்று பெண்கள் மொழியை கட்டுடைத்து வருகின்றனர். இவர்களது நீண்டகாலப் போராட்டங்களின் பின் மொழியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் “கற்பழிப்பு” என்பதைக் குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் Human/Huwoman விவாதங்கள் நடந்து வருகின்றன.
disabled, handicapped போன்ற சொற்கள் நீக்கப்பட்டு differently abled, physically challenged போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மனிதக் கூர்ப்பு நிகழ்ந்து இத்தனை நூற்றாண்டுகளின் பின்னாவது மொழியில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது தேவையானதொன்றேயாகும்.
ஆனாலும் “கறுப்பு” என்ற சொல் உலகின் அனைத்து மொழிகளிலும் இன்னமும் எதிர்மறையான சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருவது ஏனோ நெருடுகிறது.
தொலைக்காட்சி, தினசரி, சினிமாக்களில் இன்னமும் ஆபிரிக்கர்/ஆசியர்களைக் குறிப்பதற்கு Blacks என்றே பாவிக்கின்றனர். சில இடங்களில் Colored people என்று குறிப்பிடுவதுகூட ஒரு ஏமாற்றாகவே இருக்கிறது.
யேசு கூட வெள்ளையாகவே இருக்கிறார் (Madonnaவின் Like A Prayer பாடலைத் தவிர்த்து..!)
தமிழில்-
கறுப்புநாள் / கரிநாள்
கறுப்புக் கொடி
கறுப்புப்பணம்
கறுப்புச்சந்தை
கறுப்புப்பட்டியல்
கறுப்பு ஆடு (Who is the blacksheep என்ற சிவாஜியின் பைலட் பிரேம்நாத் பாடலை நினைவில் கொள்க!!)
பிளாக்மெயில் (தமிழ் என்ன?)
பிளாக் அவுட் (தமிழ் என்ன?)
……….
இது போன்ற கறுப்பை குறிப்பிடும் சொற்கள் உலகின் பிரதான மொழிகள் அனைத்திலும் ஒன்றாகவே உள்ளன. அப்படியானால் நாம் அல்லது உலகில் பயன்படுத்தும் மொழியென்பது “வெள்ளை”நிறத்தவர்களின் மொழியா? அவர்களது மொழியை அப்படியே எமது மொழிக்கு பெயர்த்து வைத்திருக்கிறோமா?
தமிழில் கறுப்பின் எதிர்மறைப் பாத்திரம் கடுமையாகவே இருக்கிறது.
கதை/கவிதகளில்-
… அவன் முகம் கறுத்தது.
…. அவளது முகத்தில் கரி பூரினான்.
சிறுபிள்ளைகள் அதிகம் விரும்பிப்படிக்கும் அம்புலிமாமா வகையறாக்களில் தேவர்கள்/நல்ல மனிதர்கள் எல்லோரும் வெள்ளை. அசுரர்கள்/கெட்ட மனிதர்கள் எல்லோரும் கறுப்பு. கறுப்பின் எதிர்மறை பிள்ளைப்பிராயத்திலிருந்து இப்படித்தான் ஊட்டப்படுகிறது.
இன்று இலங்கை, இந்தியா, இடம்பெயர்ந்த நாடுகளில் இரண்டறக் கலந்துவிட்ட சினிமாவும் இதில் குறைவைக்கவில்லை. வில்லன், வில்லனின் அடியாட்கள் எல்லோரும் கறுப்புக் கறுப்பாய் இருப்பார்கள். கதாநாயகன்/கதாநாயகி பளீர் வெள்ளையாக இருக்க அவர்களது நண்பர்கள் மட்டும் கறுப்பாக இருப்பார்கள். ஏழை/கூலி என்று யாரையாவது காட்டினால் அவர் கறுப்பாகவே இருப்பார்.
மொழியில் இந்த திட்டமிட்ட நிறப்பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டாலும் அது பற்றி போதுமான விவாதங்கள் நடத்தப்படவில்லைப்போல் படுகிறது. குறிப்பாக “கறுப்பர்கள்” ஆகிய நாம் எம்மால் பயன்படுத்தப்படும் மொழியில் எம்மைக் குறிவைக்கும் மொழிப்பாகுபாடு குறித்து கவனம் கொள்ளக்கூடாதா?
எனக்கென்னவோ தமிழ்மொழி என்றால் இந்தியாவில் மும்பாய் எக்ஸ்பிரஸிலும், ஈழத்தில் உந்துருளியிலும் கவனம் குவிவதாகத் தெரிகிறது.
பிந்திய இணைப்பு:
சூடானிய டிங்கா பெட்டைகளில் ஒருத்தி - ஒரு பொடிச்சி
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
08 August 2005
கண்ணாடிப் பூக்கள்
வலைப்பதிவில் பிச்சாபாத்திரம் எழுதிய விமர்சனம் படித்துவிட்டு கண்ணாடிப் பூக்கள் வாங்கிப் பார்த்தேன்.
தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத குழந்தை மனநிலை பற்றிய படம். சிறுவனின் நடிப்பு/முகபாவம் பாத்திரத்தை உயிராக்கி விடுகிறது. படம் பார்த்து நீண்ட நேரத்திற்குப் பிறகும் சிறுவனின் முகம் மனசை விட்டு மறையவில்லை. நீதி மன்றக் காட்சியில் சிறுவன் எல்லோரையும் பார்த்து மன்றாடுகையில் எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்து அழுதேவிட்டேன். இதேபோல் தாத்தா சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனைப் பார்க்க வரும்போதும் திரும்ப தொண்டை அடைக்கிறது.
படத்தில் வரும் மனிதர்கள் எல்லோரும் யதார்த்தமாக இருப்பதால் அவரவர் சூழலிற்கேற்ப நல்லவர்கள்/கெட்டவர்களாய் தெரிகிறார்கள். இதுவும் படத்தின் வெற்றியே.
நடிகர்கள் Imageம், கவர்ச்சியும் முதலாகப்போட்டு கோடியாகப் பணத்தைக் கொட்டி படம் காட்டிக்கொண்டிருக்கும் சூழலில் கண்ணாடிப் பூக்கள் போன்ற படங்கள் பாலைவனச் சோலை போல.
படத்தில் வரும் பார்த்திபன் பெண் வேடம் போட்டு ஆடும் பாடல் காட்சி, சீர்திருத்தப்பள்ளியை அதன் யதார்த்தத்தை மீறி சாதாரண Hostel போலக் காட்டியிருப்பது, பாடல்கள் என்று படத்தில் நெருடல்கள் இல்லாமலில்லை. பாடல்களில்லாமல் Black படம் போல மனதை வருடும் இசையை மட்டும் சேர்த்திருக்கலாமோ!
படத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்டபின் படத்துடன் சம்பந்தப்பட்ட/படாத சில கேள்விகள் தோன்றுகின்றன.
- குடும்பம் என்ற அமைப்பில் அம்மா பாத்திரம் மட்டும்தானா என்றென்றும் தியாகத்திற்குரியது?
- குழந்தை வளர்ப்பு என்பது அம்மாவுக்கு மட்டுமுரியதா?
- சொந்தக் குழந்தை உள்ள பெற்றோர் பிற குழந்தைகளை தத்தெடுப்பது சரியா?
- சமூக வக்கிரத்தால் பாதிக்கப்பட்டு தானாக சிறைக்கு/சீர்திருத்தப் பள்ளிக்கு திரும்ப வரும் முருகன் போன்ற சிறுவர்களின் நிலை என்ன?
பிச்சாபாத்திரம் எழுதிய விமர்சனம் படிக்க:
http://pitchaipathiram.blogspot.com/2005/03/blog-post_26.html
01 August 2005
கண்காணிப்பு அரசியல்
செப்ரெம்பர் 11 அமெரிக்காவின் உலக வர்த்தக வலயத் தாக்குதலுடன் உலகமெங்கும் கலிகாலம் (பயங்கரவாதம்) தலைதூக்கிவிட்டது என்று முதலாம் உலகநாடுகள் பறை கொட்டிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பயங்கரவாதப் பூதத்தை அடக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புப் போர் (Anti Terror war) என்ற பெயரில் கிழமைக்கொரு புதிய திட்டங்களையும் இந்த நாடுகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசமயப்படுத்தல் (Globalization) என்றோ G-8 என்றோ எந்தப் பெயரில் இந்த முதலாம் உலகத் தலைவர்கள் சந்தித்துக் கொண்டாலும் பயங்கரவாதத்தை அடக்குவதற்கான தமது புதிய கண்டுபிடிப்புகளை அறிவிப்பதுடன் இவை 100வீத திருப்தியைத் தருவதாகவும் பூரித்துப் போகிறார்கள்.
ஆனால் யதார்த்தத்தில் உலகம் முழுவதும் குண்டுகள் வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அப்படியென்றால் இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எதைத்தான் சாதிக்கின்றன?
தமது சொந்தநாட்டு மக்களை முற்றுமுழுதாக கண்காணிப்பதற்கும், தமது அதிகாரங்களிற்கு அச்சுறுத்தலாயிருக்கும் உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிப்பதற்குமே முஸ்லீம் பயங்கரவாத பூச்சாண்டி இந்த நாட்டு ஆளும் கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தெரு, பொது இடங்கள், பூங்காக்கள், புகையிரத நிலையம்…. என்று சனங்கள் கூடுமிடமெல்லாம் அவர்களை 24 மணிநேரமும் கமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
மின்தபால் வரிவரியாக வாசிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்பவரின் தாத்தா, பாட்டி பிறந்த திகதியிலிருந்து அனைத்துக் குடும்ப விபரங்களும் பதிவு செய்யப்பட்டு போக இருக்கும் நாடுகளுக்கு (குறிப்பாக அமெரிக்காவுக்கு) வழங்கப்படுகிறது.
கடவுச்சீட்டில் கையடையாளம் பதிக்கப்படுகிறது.
கண்களை ஊடுருவி ஆட்களை அடையாளம் காணும் கருவிகள் அடுத்ததாக நடைமுறைக்கு வர உள்ளன.
மொத்தத்தில் கண்ணாடிக் கூண்டிற்குள் பொதுமக்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். தேசியத்தின் பெயரால், பயங்காரவாத எதிர்ப்பு என்ற பெயரால் இவையனைத்தையும் மக்களால் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டுள்ளன. கிரிமினல் அரசுகளால் அப்பாவிப் பொதுமக்கள் தமது அடிப்படை உரிமைகளையும் இழந்து கிரிமினல்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.
இத்தனைக்கும் இந்த நாடுகள் தாம்தான் சனனயாகத்தின் காவலர்கள் என்றும் ஏனைய நாடுகளிலும் இந்த சனனாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்றும் முண்டியடிக்கின்றன.
இந்த அரசாங்கங்களை விமர்சிப்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர். கொலிவூட் நடிகர்களுக்கு படவாய்ப்பு மறுக்கப்பட்டது. பாடகர்களுக்கு மேடை மறுக்கப்பட்டது. ஊர்வலங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு பொலிஸாரின் வன்முறை ஏவப்பட்டது. காரணங்களின்றி பலர் சிறையிலடைக்கப்பட்டனர். தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தாங்களே தங்களை தணிக்கை செய்து கொண்டன. சந்தேகப்பட்டால் யாரையும் எங்கேயும், எப்போதும் சுட்டுக் கொல்லலாம் (Shoot to kill). இவையெல்லாம் பயங்கரவாத எதிர்ப்பு நடடிக்கைகள் என்ற பெயரல்தான்.
ஸ்ராலினின் நிரவாகத்தை விமர்சித்து George Orwell எழுதிய விலங்குப் பண்ணை நாவலை நூலாகவும், காட்டுன் திரைப்படமாவும் இந்த அரசுகள் பல வழிகளிலும் வாரி வழங்கியபோது அதே George Orwellஇன் விமர்சனம் இன்று தங்களுக்கே சரியாகப் பொருந்துகிறது என்று அறிந்திருப்பார்களோ என்னவோ!!!
Technorati Tags: தமிழ்ப்பதிவுகள் தமிழ்
27 July 2005
தமிழ் வலைப்பதிவு குறித்து!
சொந்த வாழ்க்கையின் குறிப்புகளாகத்தான் (Diary) வலைப் பதிவுகள் ஆரம்பித்தன என்று எங்கேயோ படித்த ஞாபகம். அமெரிக்காவின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின்போது ஈராக்கிலிருந்து ஈராக்கியர் ஒருவர் தொடர்ந்து எழுதிவந்த வலைப்பதிவுடன் வலைப்பதிவுகள் பிரபலமாகிவிட்டன.
********
நான் வலைபதிவதற்கு புதிது என்றாலும், நீண்டகாலமாக தமிழ் வலைப்பதிவுகளைப் படித்து வருகிறேன். பலதரப்பட்ட விடயங்களையும், வேறுவேறான பார்வைகளையும் அறிவதில் இந்தப் பதிவுகள் நிறையவே எனக்கு உதவியிருக்கின்றன.
சுஜாதா, மாலன், ஜெயகாந்தன்… என்ற பிரபலங்களைத் தாண்டி வலைப் பதிவுகள் வளர்ந்து கொண்டிருப்பது சந்தோசமான விசயம்.
நாராயண், மதி கந்தசாமி விமர்சனங்களைப் படித்துவிட்டு படங்களைத் தேடத் தொடங்கியாயிற்று. ஒரு பொடிச்சியின் பெண்ணியக் குறிப்புகளைப் படிக்கும்போது குற்றவுணர்வால் குறுகிப்போக வேண்டியிருக்கிறது.
தான் ஆக்ரோசமாசமாக மோதும் சிவகுமாருக்கு மாலனின் பதிவில் அநியாய தர்ம அடிகள் விழுந்தபோது, அதை எதிர்த்து சிவகுமாருக்கு ஆதரவாக ரோஸாவசந்த் எழுதுவதும், கூடியளவில் தாக்குதல்களுக்குள்ளாகும் டோண்டுவே மற்றைய பதிவுகளுக்கு அதிக பின்னூட்டமிடுபவராய் இருப்பதும், தனது நம்பிக்கைகள் - அவநம்பிக்கைகளை ஈழநாதன் அப்படியே தருவதும், சொந்தப் பெயர் முகவரியுடன் அரசியலை துணிச்சலாக ரயாகரன் அலசுவதும், எந்தவித பூச்சுமின்றி தனது மனதை டிசே தமிழன் வாளின் நுனியில் சிதறும் வாழ்வு என்று திறந்து காட்டுவதுமான ஆரோக்கியமான சூழல் வலைப்பதிவில் தொடர வேண்டும்.
**********
கருத்துகள் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமென்றால் நாங்கள் மந்தைகளாகவே இருந்திருப்போம். வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது. சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.
***********
நாம் நினைப்பதை உரத்துச் சொல்லும் அதே நேரம் அடுத்தவருக்கும் தான் நினைப்பதை சொல்லும் உரிமை உண்டு என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதுதான் ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலுக்கான அடிப்படை.
எமக்குச் சரியெனப்படுவதை ஆதரிப்போம். பிழையெனப்படுவதை எதிர்ப்போம். இந்தச் சரியும், பிழையும் பற்றிய மாற்று கருத்துகளை நாகரிகமாக விவாதிப்போம்.
**********
இதுவே எனது கடைசிப் பதிவு, விடைபெறுகிறேன் என்று சொல்பவர்கள் மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன்.
**********
உலகம் சுற்றுவதை ஒரு சிலரால் நிறுத்திவிட முடியாது.
26 July 2005
மனிதத் தாக்குதல் (அமெரிக்கா-அல்கைடா.2)
இலண்டன் தாக்குதலை பற்றி 2 விதமான கருத்துகள் அதிகம் பேசப்படுகின்றன.
1. அரபுநாடுகள் மீதான அமெரிக்க கூட்டு நாடுகளின் ஆக்கிரமிப்பே இலண்டன் தாக்குதலுக்கு காரணம்.
2. அல்கைடா பயங்கரவாதிகள் ஈவிரக்கமற்ற கொலையாளிகள்.
காரண, காரியங்களைத் தேடும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தாலியோ அடுத்த தாக்குதல் தங்கள் நாட்டில்தான் என்று இப்போதே அறிவித்துவிட்டது.
ஒன்றில்லாமல் மற்றதில்லை. அரச பயங்கரவாதம் எதிர்ப்பயங்கரவாதத்தை தூண்டுகிறது. ஒன்றை ஒன்று தமது நடவடிக்கைகளுக்கு காரணம் காட்டி கொள்கின்றன.
அமெரிக்க கூட்டுப் படைகளின் மிலேச்சத்தனமான, சட்டபூர்வமற்ற கபட யுத்தங்கள் யூகோசெலவாக்கியாவில் அட்டுழியம் புரிந்தன. பின்னர் ஈராக்கில் மனித உரிமை மீறல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன. தமது நோக்கத்திற்காக ‘எதையும்’ செய்வோம் என்ற திமிரில் சமநிலையற்ற, வான், தரை நவீன யுத்தக் கருவிகள் மூலம் பலமற்ற ஈராக்கை கைப்பற்றிய இந்தக் கூட்டுப்பயங்கரவாதிகள் அப்பாவி மனிதர்கள் மீது நடாத்திய வெறியாட்டம் அம்பலப்பட்டுப்போன பின்பும் கூட தமது நிலையை மாற்றவில்லை.
சுட்டுத் தள்ளு. சிறையிலடை. பெண்களை பாலியல் வதை செய். குழந்தைகளை பட்டினி போடு. எதிர்ப்பு தானாகவே அடங்கிவிடும். இது இந்தப் பயங்கரவாத நாடுகளின் தத்துவம். எனவே இவைகளின் பலிக்கடா அப்பாவி பொதுமக்கள்தான்.
இந்த நாட்டின் தலைவர்கள் தங்கள் பாதுகாப்பை பிரமாண்டமானளவில் பலப்படுத்திக் கொண்டதால் அவர்களை நெருங்க முடியாத அல்கைடாவோ தனது தாக்குதல்களுக்கு தெரிவு செய்ததும் இலகுவான இலக்கான அப்பாவி பொதுமக்களைத்தான்.
எனவேதான் இந்த இரண்டு வகைத் தாக்குதல்களையும் எவ்வகையிலும் நியாயப்படுத்திவிட முடியாது. அமெரிக்க கூட்டுப் படைகளின் அநியாயத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் கூட அல்கைடா குண்டுத் தாக்குதல்களில் பலியாகியிருக்கக்கூடும் என்பது வெறுமனே செய்தியாக மட்டும் இருந்துவிட முடியாது.
பின் இணைப்பு: (இலண்டன் தாக்குதல் பற்றி நான் படித்தவற்றில் குறிப்பிடக்கூடியவை)
1.http://thoughtsintamil.blogspot.com/2005/07/blog-post_112075679868009412.html
2. http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/July/17/Article-1.htm
3. http://tamilarangam.blogspot.com/2005/07/blog-post_08.html
எது பயங்கரவாதம்? (அமெரிக்கா-அல்கைடா.1)
செப்ரெம்பரரில் அமெரிக்க வர்த்தக வலயம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா, சவுதி, மொறொக்கோ, துருக்கி, ஸ்பானியா, எகிப்து என்று குண்டுவெடிப்பு தொடர்கிறது. இதற்கெல்லாம் காரணம் அல்கைடா என்று அரசுகளும், ஊடகங்களும் அடித்துச் சொல்கின்றன.
இன்றைய அல்கைடா அமெரிக்காவின் அன்றைய தயாரிப்பு. அப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத்யூனியனை விரட்டுவதற்காக மிக விரைவாகவும், செழிப்பாகவும் பாகிஸ்தானில் வைத்து வளர்க்கபப்ட்ட அல்கைடாவை மேற்கு நாடுகளுக்கும், அமெரிக்க கூட்டு நாடுகளுக்கும் நன்றாகவே தெரியும். கணணிவலைத் தொடர்புகளிலிருந்து, ஆயுதப் பயிற்சி வரை டொலர் வாரியிறைக்கப்பட்டது.
சோவியத் யூனியன் உடைவின் பின் எதிரிகள் என்ற நிலமையில் மாற்றமேற்பட்டு எண்ணெயில் அமெரிக்கா கவனத்தை திருப்பியபோது அல்கைடாவின் நேசம் பகையாகிவிட்டது. அமெரிக்காவுக்கு நட்பாக இருக்கும் வரைக்கும் கண்டுகொள்ளாதுவிட்ட மேற்கு நாடுகளும் முந்தாநாள் இரவுதான் புதிதாகப் பிறந்ததைப்போல அல்கைடா பயங்கரவாதம் என்று அலறத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் கண்மூடித்தனமான அரபுநாடுகளின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு இன்னும் பல மனிதக் குண்டுகளை அல்கைடாவுக்குப் பெற்றுத் தர, யுத்தம் பல முனைகளில் நடைபெறுகிறது.
ஊற்றுமூலம் பயங்கரவாதமா? விளைபொருள் பயங்கரவாதமா?
14 July 2005
Microsoft plus Spyware
Microsoft இந்த வருட ஆரம்பத்தில் Anti Spyware மென்பொருளை வெளியிட்டபோது எனக்கு ஆச்சரியம்தான். கணனிப் பயனாளர்களை உளவு பார்ப்பதில் கொடிகட்டிப் பறக்கும் Microsft இற்கு என்ன நடந்தது? இத்தனை வருடம் தள்ளிப்போட்டுக்கொண்ட விடயத்தை இப்பொது ஏன் கையில் எடுத்தது என்று குழப்பம்தான். Microsft இன் Anti Spyware இனைப் பயன்படுத்திப் பார்த்த கணணிச் சஞசிகைகள் பலவும் நன்றாக வேலை செய்கிறது என்று வேறு பாராட்டிவிட்டார்கள். தொடர்ச்சி…
11 July 2005
அறிமுகம்
எழுத, வாசிக்க நிறையவே இருக்கின்றன. எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. யாருமே எழுதாதை எழுதிவிடப் போவதுமில்லை. பிறகேன் இந்த வலைப் பதிவு?
தெரியாது!
சுட்டதும், சுடாததும் என்று தலைப்பை வைத்துக்கொண்டது…
பாதித்ததும், பாதிக்காததும் அல்லது பொறுக்கியதும், பொறுக்காததும்…
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்களேன்…!
please சனனாயகம்
சனனாயகம் ஒரு மகத்தான வார்த்தை.
பயங்கரவாதத்தை ஒழித்து சனனாயகத்தை நிலைநாட்டுவோம் என்று TVக்கு முன்னால் இளிப்பது புஷ்ஷுக்கு கக்கூசுக்குப் போவது போன்று காலை, மாலைக் கடன்களில் ஒன்று. புஷ்ஷினதும், கூட்டாளிகளினதும் படைகள் போனபின் அப்கானிஸ்தானில் போதைப்பொருள் பயிர்செய்கை அமோகம் என்று அவாளோட CNN அழுகிறது. தலிபான் ஆட்சியின் கீழ் போல்தான் இப்போதும் இருக்கிறோம் என்று அப்கான் பெண்கள் பேட்டி கொடுக்கிறார்கள். தொடர்ச்சி…
பரிசும், ஜெயகாந்தனும்
இல்லாதவர்கள், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்….. மனதில் பதிந்த ஜெயகாந்தன் கதைகளை அடுக்கிகொண்டு போகலாம். மறு பக்கம் ஜெயகாந்தனின் சிலுப்பா தலை, இலக்கிய சண்டித்தனம்… எல்லாம் பிடித்த விடயங்கள். இருந்தும் என்ன, அவரின் அரசியல் அருவருக்க வைப்பது உண்மை.
ஜெயகாந்தன் மாறலாம். ஆனால் பரிசு கொடுக்கும் பீடங்கள் மாறவில்லை. ஜெயகாந்தன் கதைகளில் ஜெய ஜெய சங்கர மட்டும்தான் அவர்களுக்கு பரிசுக்குரியது.
பரிசென்பது சும்மா கொடுக்கும் ஒன்றல்லவே!!
தமிழீழம்
இத்தனை காலப் போராட்டம்/யுத்தத்தின் பின் இப்போது மிச்சமாயிருப்பது
1. புலிகள்
2. துரோகிகள்
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர் இப்படித்தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கடந்த காலமும், நிகழ்காலமும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டேயிருக்கிறது.
கறுப்பு அல்லது வெள்ளை தான் என்ற வட்டத்தை எப்போது தாண்டுவோம்?!
Get free blog up and running in minutes with Blogsome | Theme designs available here


